நேபாள யாத்திரை
இமய மலைத் தொடரில்
அமைந்துள்ள நேபாளத்திலுள்ள சில முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் ஆலயங்களைப் பற்றி
சற்று அறிவோமே.
நேபாளம் வடக்கே
சீனாவையும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கே இந்தியாவையும் எல்லையாகக் கொண்ட ஓர் அழகிய
பிரதேசம் ஆகும். காத்மண்டு இதன் தலைநகரமானாலும் இதன் பொருளாதாரத் தலை நகரமாக பிர்கஞ்ஜ்
என்ற நகரும் சுற்றுலாத் தலைநகராக பொக்ரா நகரும் அமைந்துள்ளன. மலைகள் அடர்ந்த இந்நாட்டின்
வடபகுதியில் உலகத்தின் உயர்ந்த பத்து மலைச் சிகரங்களில் எவெரெஸ்ட் உட்பட எட்டு சிகரங்கள்
அமைந்துள்ளன. இவ்ற்றைத் தவிர கடல் மட்டத்திலிருந்து
20000 அடி உயரத்தில் 250 மலைமுகடுகள் காணப்படுகின்றன.
நேபளத்தில்
81.3 சதவீதம் ஹிந்துக்கள்.9 சதவீதம் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பெரும்பாலான
மக்கள் இரு மதங்களையும் சொந்த மதங்களாக மதிக்கிறார்கள்.
நேபாளத்திற்குள்
நுழைவதற்கு இந்திய நேபாள எல்லையிலுள்ள சொனாலி என்ற இடத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
வாரணாசியிலிருந்து சாலை வழியாக சொனாலியை அடையலாம். கோரக்பூரிலிருந்து 90 கி. மீ பயணம்
செய்தும் இவ்விடத்தை அடையலாம். சொனாலியின் ஒரு பகுதி பீஹாரிலும் ஒரு பகுதி நேபாலிலும்
உள்ளது. இங்குதான் இந்தியாவிலிருந்து செல்பவர்களின் ID பரிசோதிக்கப்படுகிறது. நேபாளத்தில் இந்திய ரூபாய்
நோட்டுக்கள் செல்லுபடியாகும் என்றாலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்
படுவதில்லை. அதனால் இந்த நோட்டுக்களை எல்லையிலேயே மாற்றிக்கொண்டு செல்வது உசிதம். சொனாலியிலிருந்து
நாம் செல்ல இருக்கும் முதல் இடம் நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு.
டென்லியிலிருந்து
விமானம் மூலமாகவும் காட்மண்டுவை அடையலாம். இந்நகரம் சிவபுரி,ஃபூல்சோகி, நாகர்ஜுன்,சண்டிகிரி
என்ற நான்கு பெரிய மலைகளால் சூழப்பட்டிருக்கின்றது. பாக்மதி நகரின் கரையில் அமைந்துள்ளது.
இங்குள்ள கோவில்கள், நினைவுச்சின்னங்கள் முதலியவை ஹிந்து மற்றும் புத்த மத நாகரிகத்தின்படி
அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதிநாத் சிவாலயம் இங்கு மிகவும்
புகழ் பெற்ற கோவிலாகும். பதினான்காம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது
இக்கோவிலின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முதல் கோவிலின்
வெளிப்புறத்தில் பெரும் பகுதி அழிக்கப்பட்டு விட்டது. நாம் இப்போது காணும் கோவில் பத்தொன்பதாவது
நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆனால் கோவிலில்
இருக்கும் நந்தியும் நான்கு தலையுள்ள சிவமூர்த்தியும் குறைந்தது முன்னூறு ஆண்டுகள்
பழமையானவை. இக்கோவில் UNESCOவால் world heritage site ஆக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு கொண்டடப்படும்
மிக முக்கியமான விழா சிவராத்திரி ஆகும். இங்கு பூஜை செய்பவர்கள் அனைவரும் கர்நாடகாவைச்
சேர்ந்த பிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கம் ஆதி சங்கரரால் பாரத தேசத்தின்
பல மாகாணங்களுக்குள் கலாசாரப் பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
புத்தர்களின்
PAGODA என்ற சிற்பக்கலை வடிவத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. நன்கு செதுக்கப்பட்ட
முக்கோண வடிவ மர வேலைப்பாடுகள் வெள்ளித் தகடுகளால் மூடப்பட்டிருக்கின்றன. கூரைகள் இரண்டு
நிலைகளாக செப்பினாலும் தங்கத்தினாலும் வேயப் பட்டிருக்கின்றன. பிரமிக்க வைக்கும் அலங்காரங்களுடன்
காணப்படும் இக்கோவிலில் பிரம்மாண்டமான தங்கத்தால் செய்யப்பட்ட நந்தி ஒன்று காணப்படுகிறது.
பசுபதிநாத் ஆலயத்தில்
இறப்பவர்கள் இந்த பிறவியில் என்ன பாவங்கள்
செய்திருந்தாலும் மீண்டும் மனிதப் பிறவியே எடுப்பர் என்று நம்பப்படுகிறது. இதனால் தங்கள்
வாழ்க்கையின் கடைசி சில நாட்களை கழித்து இங்கு மரித்து பாக்மதி ஆற்றின் கரையில் தகனம்
செய்யப் படுவதற்காகவே பலர் இங்கு வருகின்றனர். இவர்களின் சாம்பல் புனித நதியான பாக்மதி
ஆற்றில் கலந்து சென்று கங்கை அடைவதாக ஐதீகம். இதற்காகவே இந்த ஆற்றின் ஒரு கரையில் உடல்களை
தகனம் செய்வதற்காக மேடைகள் அமைக்கப்
பட்டிருக்கின்றன.
பாக்மதி ஆற்றின்
தெற்கு கரையிலேயே ஐந்து ஆலயக்கூடம் என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு காணப்படுகிறது.
ஒரு காலத்தில் புனித ஆலயமாகக் காணப்பட்ட இவ்விடம் இப்போது முதியோர் தங்கும் இடமாக விளங்குகிறது.
பாக்மதி ஆற்றின் கிழக்குக் கரையில் சிவனுக்குப் பல ஆலயங்கள் காணப்படுகின்றன. எங்கு
பார்த்தாலும் சிவலிங்களாகவே காணக் கிடைக்கிறது.
இந்த ஆலயத்தைப்
பற்றி சுவையான ஒரு ஐதீகம் உண்டு, தன் தாயையே
மணம் புரிந்த கலி என்ற மகாபாவி கடவுள்களால் பூமிக்கடியில் கற்களாகவே இருக்க வேண்டும்
என்று சபிக்கப்பட்டவன். உலகத்தில் பாவங்கள் அதிகரிக்கும்போது இந்தக் கற்கள் மெதுவாக
மேல் எழுந்து வருவதாகவும் அவை முழுதும் தரை மட்டத்திற்கு வரும்போது உலகம் அழிந்து விடும்
என்றும் நம்பப்படுகிறது.
நீருக்கு நடுவே
காட்சி தரும் ஜலநாராயணர் கோவில் இங்கு காணவேண்டிய மற்றொரு முக்கிய இடமாகும்.
காத்மண்டுவிலிருந்து
8 கி.மீ தொலைவிலுள்ள ஒரு மலைத்தொடரில் சங்கு நராயணர் கோவில் என்ற பிரசித்தி பெற்ற ஆலயம்
உள்ளது. ஐந்தாவது மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் நேபாள சிற்பக்கலைக்கு எடுத்துக்
காட்டான பல சிற்பங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. UNESCO வால் world heritage site ஆகப்
பராமரிக்கப் பட்டு வருகிறது. இக்கோவிலைப்பற்றி சுவையான ஒரு கதை உண்டு. பழங்காலத்தில்
க்வாலா என்ற மாடு மேய்ப்பவன் சுதர்சன் என்ற பிராமணனிடம் நிறைய பால் கொடுக்கக்கூடிய
ஒரு பசுவை வாங்கினான். தினந்தோறும் அதை சுங்கா என்ற காட்டிற்கு மேய்வதற்காக அழைத்துச்
செல்வது வழக்கம். மாலை வீடு திரும்பி பால் கறந்த போது பல நாட்களுக்கு மிகக் குறைவான
அளவே பால் கொடுத்தது. க்வாலா பசுவை விற்ற பிராமணனிடம் முறையிட இருவரும் சென்று பசுவின்
நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினர். பசு தினமும் ஒரு குறிப்பிட்ட மரத்தருகிலேயே செல்வதையும்
அங்கே ஒரு சிறுவன் பாலைக் கறந்து குடிப்பதையும் கண்டனர். அந்த சிறுவன் பேய் என்றும்
அந்த மரமே அதன் இருப்பிடம் என்று நினைத்த பிராமணன்
அந்த மரத்தை வெட்டிவிட அதிலிருந்து மனித ரத்தம் பீறிடத் தொடங்கியது. அப்பொழுது மஹாவிஷ்ணு
வெளிவந்து பண்டு நடந்த ஒரு கதையைக் கூறினார்.
தான் அறியாமல் சுதர்ஸன் எங்கிற அந்த பிரமணனின் தந்தையைக் கொன்று விட்டதாகவும்
அதனால் விளைந்த சாபத்தால் பசுவின் பாலைக் குடித்துக்கொண்டு
அந்த மரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் மரம் வெட்டப் பட்டபோது சாபத்திலிருந்து விடுபட்டதாகவும்
கூறினார். இதைக் கேட்ட பிராம்மணனும் க்வாலாவும் சேர்ந்து சங்குநாராயணர் கோவிலைக் கட்டியதாக
வரலாறு. இப்பொழுதும் சுதர்சனுடைய தலைமுறையினரே அங்கு பூஜைகள் செய்வதாகவும் க்வாலாவின்
சந்ததியரே அங்கு பாதுகாவலர்களாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
பசுபதிநாத் கோவிலிலிருந்து
ஒரு கி.மீ தொலைவில் குஹ்யேஸ்வரி என்ற சக்தி பீடம் உள்ளது.. பிரதாப் மல்லா என்ற அரசர்
பதினேழாம் நூற்றாண்டில் கட்டிய கோவிலில் தேவியின் மர்ம உறுப்பு விழுந்ததாகக் கூறப்படுகிறது
No comments:
Post a Comment